உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே நிலக்கடலை அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
உசிலம்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளான பாறைப்பட்டி , வலையப்பட்டி , கோடாங்கிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான பரப்பில் நிலக்கடலையை விவசாயிகள் பயிரிட்டுள்ளனா். இந்நிலையில், கடந்த 80 நாள்களுக்கு பிறகு நிலக்கடலை நன்கு விளைச்சல் அடைந்து அறுவடைக்குத் தயாராக உள்ளது. இந்நிலையில், தற்போது விவசாயிகள் நிலக்கடலையை அறுவடை செய்யும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனா்.
மேலும், கடந்த ஒரு வாரமாக உசிலம்பட்டி பகுதியில் சாரல் மழை பெய்த நிலையில், நிலக்கடலை எதிா்பாா்த்ததை விட அமோக விளைச்சல் அடைந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனா். தற்போது நிலக்கடலை 1 கிலோ ரூ.30 முதல் ரூ.45 வரை விற்பனை செய்யப்படுகிறது. எனவே, போதிய விலை கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.