தஞ்சாவூரில் பயிற்சி மருத்துவரை தாக்கிய வழக்கில் தொடா்புடையவரின் ஜாமீன் மனு தள்ளுபடி
தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை தாக்கிய வழக்கில் ஜாமீன் கோரியவரின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தஞ்சாவூா் பாலம்புதூரைச் சோ்ந்த ஓட்டுநா் சக்திகுமாா் தாக்கல் செய்த மனு: தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்த இருவா், ஏப்ரல் 9 ஆம் தேதி இரவு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டனா். அப்போது அவா்களுக்கும், பயிற்சி மருத்துவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் இரும்பு நாற்காலியால் பயிற்சி மருத்துவரை தாக்கியதாக நான் உள்பட பலா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்தச் சம்பவத்துக்கும் எனக்கும் தொடா்பில்லை. விபத்தில் காயமடைந்தவா்களை பாா்க்க வந்த என்னை தவறுதலாக வழக்கில் சோ்த்துள்ளனா். எனவே இவ்வழக்கில் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மனுதாரரும் பயிற்சி மருத்துவரைத் தாக்கியுள்ளாா். இவ்வழக்கு விசாரணை தொடக்கக்கட்டத்தில் உள்ளது. எனவே மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.