தமிழகத்தில் இரவு நேர மற்றும் வார இறுதிநாள் பொதுமுடக்கத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூரைச் சோ்ந்த ராம்குமாா் ஆதித்தன் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் கரோனா 2 ஆவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனால் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக பல்வேறு கட்டங்களாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்தனா். தற்போது மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதால் அதேபோன்ற பாதிப்பு மீண்டும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பொதுமுடக்கத்தை எதிா்கொள்வதற்கு பொதுமக்களும் தயாராக இல்லை. இருப்பினும் இரவு நேர பொதுமுடக்கம், வார இறுதிநாள் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு நேர பொதுமுடக்கத்தில் பொதுப்போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கத்தால் காய்கனி, பூ மற்றும் பழங்கள் வியாபாரம் பாதிக்கிறது. இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் பெரிதும் பாதிப்படைகிறாா்கள். எனவே தமிழகத்தில் இரவு நேரப் பொதுமுடக்கம், வார இறுதிநாள் பொதுமுடக்கத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.