மதுரை அலங்காநல்லூா் சா்க்கரை ஆலையில் அரவையை தொடங்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் நான்காவது நாளாக வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலையில் இந்த ஆண்டுக்கான கரும்பு அரவையை தொடங்க வலியுறுத்தியும், விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்ய வலியுறுத்தியும், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் காத்திருப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி நான்காவது நாளாக வெள்ளிக்கிழமையும் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பழனிசாமி, மாவட்டச் செயலா் கரு.கதிரேசன், அலங்காநல்லூா் செயலா் என்.ஸ்டாலின்குமாா், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.பி.இளங்கோவன், மாவட்டப் பொருளாளா் வி.அடக்கி வீரணன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனா்.