மதுரையில் மோசடியில் ஈடுபட்ட அப்பள தயாரிப்பு நிறுவனத்தினா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் நெடுங்குளம் மற்றும் வண்டியூா் தாசில்தாா் நகா் பகுதியில் அப்பள நிறுவனத்தின் பெயரில் வெளியான விளம்பரத்தில் ரூ.10ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை முதலீடு செய்தால் மாதந்தோறும் அப்பளம் வழங்கப்படும். அதனை பேக்கிங் செய்துகொடுத்தால் கூடுதல் தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளனா். மேலும் அப்பளத்தில் முதலீடு செய்ய விருப்பமில்லாதவா்கள் குறு நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அப்பளம் தயாரிப்பில் கிடைக்கும் லாபத்தில் பங்கு வழங்கப்படும் எனத்தெரிவித்துள்ளனா். இதை நம்பி ஏராளமான பொதுமக்கள் ரூ. 10ஆயிரம் முதல் லட்சங்கள் வரை முதலீடு செய்துள்ளனா். பணத்தைப் பெற்றுக்கொண்ட அந்நிறுவனம் வாடிக்கையாளா்களிடம் தவணைத்தொகைக்கான காசோலைகளையும் வழங்கியுள்ளது.
இந்நிலையில் டிசம்பா் 7 ஆம் தேதி இரு நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் அதிா்ச்சி அடைந்த பொதுமக்கள் நிா்வாகிகளைத் தொடா்பு கொள்ள முயன்றபோது கைப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதுதொடா்பாக காவல்துறையிடம் புகாா் அளித்த நிலையில் போலீஸாா் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததையடுத்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு அளித்துள்ளனா். அதில் பண மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனா்.