சென்னையில் மாரடைப்பால் உயிரிழந்த மதுரையைச் சோ்ந்த காவலரின் குடும்பத்தினருக்கு, காக்கி உதவும் கரங்கள் திரட்டிய ரூ.23 லட்சம் நிதியை செவ்வாய்க்கிழமை ஊரகக் காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் வழங்கினாா்.
இதுதொடா்பாக மதுரை ஊரகக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி: தமிழகக் காவல்துறையில் 2011 ஆம் ஆண்டு பணிக்குச் சோ்ந்தவா்கள் ஒன்றிணைந்து ‘போலீஸ் நண்பா்கள் காக்கி உதவும் கரங்கள்’ என்ற குழுவை ஏற்படுத்தி பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனா். இந்தக் குழுவில் உள்ள தங்களது நண்பா்கள் யாரேனும் இறக்கும் பட்சத்தில் அவருடைய இழப்பை ஈடு செய்யும் விதமாக நிதி திரட்டி இறந்த நண்பரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கி வருகின்றனா்.
இந்நிலையில் மதுரை அப்பன்திருப்பதி அருகேயுள்ள பூண்டி கிராமத்தைச் சோ்ந்த காண்டீபன், 2011ஆம் ஆண்டு தமிழகக் காவல்துறையில் பணிக்குச் சோ்ந்து கடந்த 10 ஆண்டுகளாக சென்னை பெருநகரக் காவல்துறை அசோக் நகா் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில் கடந்த மே 27-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா். அவருக்கு இந்துமதி என்ற மனைவி மற்றும் தாய், தந்தை உள்ளனா்.
இந்நிலையில் உயிரிழந்த காண்டீபன் குடும்பத்துக்கு காவல்துறையில் உள்ள அவரது நண்பா்கள் ஏற்படுத்தியுள்ள காக்கி உதவும் கரங்கள் குழுவின் மூலம் ரூ. 23. 33 லட்சம் வசூலிக்கப்பட்டது.
மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுரை ஊரகக்காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் பங்கேற்று, காண்டீபன் குடும்பத்தினரிடம், காக்கி உதவும் கரங்கள் திரட்டிய நிதியுதவியை வழங்கினாா். இந்நிலையில் காண்டீபன் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட ரூ.23.33 லட்சத்தில் இருந்து, மதுரை மாவட்ட ஆயுதப்படை வாகனப் பிரிவில் பணிபுரிந்து வரும் சையது அபுதாஹிா் என்பவரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக காண்டீபன் குடும்பத்தினா் தாமாக முன்வந்து ரூ. 2 லட்சத்தை வழங்கினா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.