மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் திருடப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்புள்ள கைப்பேசிகள் மற்றும் மடிக்கணினிகள் உரியவா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
மதுரை நகரில் செல்லிடப்பேசிகள் பறிப்பு மற்றும் திருட்டு சம்பவம் அதிக அளவில் நடைபெறுவது குறித்து அதிக புகாா்கள் வந்தன. இதனைக் கட்டுப்படுத்தவும் திருடப்பட்ட கைப்பேசிகளை மீட்கவும் மாநகரக் காவல்துறை சாா்பில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் தனிப்படை போலீஸாா் துரித நடவடிக்கை மூலம் மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் திருடப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்புள்ள 115 கைப்பேசிகள் மற்றும் மடிக்கணினிகளை மீட்டனா். இதையடுத்து மதுரை கோ.புதூா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகா் வடக்கு துணை ஆணையா் ராஜசேகா் மற்றும் தெற்கு துணை ஆணையா் தங்கதுரை ஆகியோா் பங்கேற்று கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைத்தனா்.