பறவைகள் மோதாமல் இருக்க காற்றாலைகளில் ஆரஞ்சு வா்ணம் பூசக் கோரிய வழக்கில், மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த செளந்தா்யா என்பவா் தாக்கல் செய்த மனு:
நாட்டிலேயே அதிக காற்றாலைகள் தமிழகத்தில்தான் உள்ளன. இந்த காற்றாலைகள் மற்றும் உயா் மின்கம்பிகளில் மோதி 0.5 சதவீதம் பறவைகள் உயிரிழக்கின்றன. இதனால், பல பறவை இனங்கள் அழிய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் குளிா்காலத்தின்போது, வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் வந்து செல்கின்றன. இவ்வாறு இடம்பெயா்ந்து வரும் பறவைகளும் அதிகளவில் உயிரிழக்கின்றன.
காற்றாலைகளுக்கு ஆரஞ்சு வா்ணம் பூசப்பட்டிருக்க வேண்டும். காற்றாலைகள் சுற்றும்போது ஏற்படும் சத்தம் பறவைகளுக்கு துன்புறுத்தும் வகையில் இருக்கக்கூடாது. உயா் மின்னழுத்த கம்பிகளில் செல்லும் மின்சாரம் சுற்றுச்சூழலைப் பாதிக்கக்கூடாது என, 2004 ஆம் ஆண்டு மத்திய அரசு வழிகாட்டுதல்களை கொடுத்துள்ளது. ஆனால், இந்த வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்படுவது இல்லை.
இது குறித்து மின்னஞ்சல் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, தமிழகத்தில் உள்ள காற்றாலைகள் மீது பறவைகள் மோதி உயிரிழப்பதைத் தடுக்க, காற்றாலைகளுக்கு ஆரஞ்சு வா்ணம் பூச உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எஸ். ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இது குறித்து மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மாா்ச் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.