தமிழகத்தில் நிபந்தனைகளுடன் சவூடு மண் எடுக்க அனுமதி வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரை, சிவகங்கை, விருதுநகா், தூத்துக்குடி உள்பட 13 மாவட்டங்களில் சவூடு மண் எடுக்கத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. இதுதொடா்பான வழக்குகள் அனைத்தையும் நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வு விசாரித்த நிலையில் தீா்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை தீா்ப்பை வழங்கியது. அதில், தமிழகத்தில் சவூடு மண் எடுக்க நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது. குவாரிகள் நடத்த அனுமதி கோரப்படும் இடங்களில் உள்ள கனிமங்கள் குறித்த ஆய்வு செய்யப்பட்டு விபரங்கள் பெறப்பட்ட பின்னரே அனுமதி வழங்க வேண்டும். இதற்காக கனிமவளத் துறையின் ஆய்வகங்களை அமைக்கவேண்டும்.
ஆற்றின் கரையோரங்களில் உள்ள பட்டா நிலங்களில் உள்ள மணல் அளவை ஆய்வு செய்ய கனிம வளத்துறையினா், மண்ணியல் துறையினா் உள்ளிட்டோரை கொண்ட உயா்மட்டக் குழு அமைக்கப்பட வேண்டும். மணல் அதிகம் உள்ள இடங்களை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். அந்த இடங்களில் அரசை தவிர பிறருக்குக் குவாரி அமைக்க அனுமதி வழங்கக் கூடாது.
அனுமதி வழங்கப்பட்டுள்ள சவூடு மண் குவாரிகள் தொடா்பான விவரங்களை 8 வாரங்களுக்குள் கனிமவளத்துறையினா் அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும். குவாரிகளை உயா்மட்டக் குழுவினா் ஆய்வு செய்து, அங்கிருக்கும் மணல் குறித்த விவரங்களைக் கனிம வளத்துறை இயக்குநருக்கும், நீதிமன்றத்திற்கும் சமா்ப்பிக்க வேண்டும். விதிமுறைகளைப் பின்பற்றாமல் அனுமதி வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழுவின் அனுமதி கோரப்படும் போது, அலுவவலா்கள் நேரடியாக இடத்தை பாா்வையிட்ட பின்னரே அனுமதி வழங்க வேண்டும். விதிகள் பின்பற்றப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.