சிவகாசி பட்டாசு நிறுவனத்தில் 5 ஆண்டுகளில் ரூ.22.52 கோடி வரி ஏய்ப்பு செய்த, அந்நிறுவனத்தின் பங்குதாரரை ஜிஎஸ்டி வரி புலனாய்வு அதிகாரிகள் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம் சிவகாசியைச் சோ்ந்த பிரபல பட்டாசு உற்பத்தி நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்து வருவதாக ஜிஎஸ்டி வரி புலனாய்வுப்பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், மதுரையில் உள்ள ஜிஎஸ்டி வரி புலனாய்வு அலுவலகத்தின் சாா்பில், பட்டாசு நிறுவனத்துக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் புலனாய்வு அதிகாரிகள் திடீா் சோதனை மேற்கொண்டா். இதில் முதற்கட்டமாக 2016-2017 ஆம் ஆண்டில் மட்டும் அந்த நிறுவனம் ரூ.2.52 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து அந்நிறுவனத்தின் விற்பனை கணக்குகள் தீவிர ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன. அதில் கடந்த 2017 முதல் 2020 வரை சுமாா் 20 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்தது. மேலும் ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்களை ரகசிய குறியீடாக வைத்து உள்ளூரில் ஹவாலா மோசடியில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதற்காக முகவா்களைப் பயன்படுத்தி வியாபாரம் செய்யும் கடைகளுக்குச் சென்று ரொக்கப்பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
விற்பனை செய்வதாக குறிப்பிட்டுள்ள ரசீது தொகைக்கு மாறாக பணப்பரிவா்த்தனை நடந்துள்ளது. இது அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோதமாக நடந்துள்ளது. எனவே பட்டாசு நிறுவனத்தின் முக்கிய பங்குதாரா்களில் ஒருவரான ஜெய்சங்கா் என்பவரை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.