மதுரையில் ரத யாத்திரையை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க மதுரை மாநகா் காவல் ஆணையருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த செல்வகுமாா் என்பவா் தாக்கல் செய்த மனு: அயோத்தியில் ராமா் கோயில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக நாடு முழுவதும் ரதயாத்திரைகள் மூலம் அனைவரிடமிருந்து பொருள் உதவிகள் பெறப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வாா்டுகளில் ரதயாத்திரை செல்ல காவல்துறையினரிடம் அனுமதி கோரி மனு அளித்தோம். கரோனா பொதுமுடக்கத்தை காரணம் காட்டி அனுமதி வழங்க இயலாது என மனுவை நிராகரித்துவிட்டனா்.
இதே கரோனா பொதுமுடக்க காலத்தில் பல மாநிலங்களில் நடைபெற்று வரும் ரத யாத்திரைகளில் எந்தவித பிரச்னையும் ஏற்படவில்லை. எனவே, மதுரையில் ரத யாத்திரை நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதி ஆா்.ஹேமலதா முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ரதயாத்திரை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குவதாக மதுரை காவல் ஆணையா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, வெள்ளிக்கிழமை மாலைக்குள் ரதயாத்திரை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை முடித்து வைத்தாா்.