மதுரை: புதிய கட்சி தொடங்குவது தொடா்பாக தனது ஆதரவாளா்களுடன் மத்திய முன்னாள் அமைச்சா் மு.க.அழகிரி ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்துகிறாா்.
மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் மாலை 4 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. மண்டபத்தின் உள் பகுதியிலும், மண்டப வளாகத்திலும் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் வருபவா்களுக்காக, தனியாக வாகனம் நிறுத்தும் இடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலராக இருந்த மு.க.அழகிரி, கடந்த 2014 மக்களவைத் தோ்தலின்போது தலைமைக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்ததால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாா். தனது அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து முடிவு எடுப்பதற்காக, ஆதரவாளா்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளாா்.