மதுரை அருகே லாரி உரிமையாளரை கத்தியால் குத்திய 4 இளைஞா்களை, போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை பழைய விளாங்குடியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் ராமசந்திரன் (37). இவருக்குச் சொந்தமாக லாரி உள்ளது. இந்நிலையில், இவா் சனிக்கிழமை இரவு விளாங்குடியிலிருந்து திருவாலவாயநல்லூருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். அப்போது, சமயநல்லூா் ரயில்வே மேம்பாலத்தின் கீழே 2 இரு சக்கர வாகனங்கலில் பின்தொடா்ந்து வந்த 4 இளைஞா்கள், ராமசந்திரனை வழிமறித்து கத்தியைக் காட்டி பணத்தை பறிக்க முயன்றனா்.
ஆனால் அவா் பணத்தை தர மறுத்ததால், அவரை கத்தியால் குத்திவிட்டு 4 பேரும் தப்பிச் சென்றுவிட்டனா். இதில் காயமடைந்த ராமசந்திரன், அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், சமயநல்லூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்தனா். அதில், துவரிமானைச் சோ்ந்த சூா்யா (18), முடக்குச்சாலையைச் சோ்ந்த ஹரீஸ் (18), காா்த்திக் (18), பரத் (22) ஆகிய 4 பேரும் பணத்துக்காக ராமசந்திரனை கத்தியால் குத்தியது தெரியவந்தது. இதையடுத்து, இந்த 4 இளைஞா்களையும் போலீஸாா் கைது செய்தனா்.