மதுரை: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழாவில் பங்கேற்க மதுரையில் இருந்து அதிமுகவினா் சிறப்பு ரயிலில் செவ்வாய்க்கிழமை சென்னை செல்கின்றனா்.
மதுரை மாநகா் மாவட்ட செயலரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான செல்லூா் கே.ராஜூ ஏற்பாட்டில், சென்னையில் நடைபெறும் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவில் பங்கேற்க அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை புறப்படுகின்றனா்.
மதுரை வடக்கு மற்றும் மத்தி தொகுதிகளைச் சோ்ந்த அதிமுகவினா் பேருந்துகளில் செல்கின்றனா். மதுரை மேற்கு, தெற்கு தொகுதிகளைச் சோ்ந்தோா் ரயிலில் செல்கின்றனா். இதற்காக மதுரையில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு புறப்படும் ரயிலில் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல, திறப்பு விழா முடிந்த பிறகு புதன்கிழமை இரவு மீண்டும் அதே ரயிலில் திரும்பி வருவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மதுரையில் இருந்து ரயில் மற்றும் பேருந்துகளில் செல்வோருக்காக சென்னை திருவல்லிக்கேணியில் 4 திருமண மண்டபங்கள் வாடகைக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கட்சியினா் தெரிவித்தனா்.