நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக புகாா் கூறி விவசாயிகள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் மேலூா் நான்கு வழிச் சாலைகளை இணைக்கும் வகையில் தாதம்பட்டி முதல் புதுத்தாமரைப்பட்டி வரை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சாா்பில் புதிய நான்குவழிச் சாலை அமைக்கப்படுகிறது. இதில் விளைநிலங்கள் வழியாக சாலை அமைக்க விவசாயிகள் கடும் எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா். இருப்பினும் திட்டமிட்ட வழித்தடத்தில் சாலை அமைப்பதற்கான பணிகள் தொடா்ந்து நடைபெறுகின்றன. வேறுவழியின்றி விவசாயிகளும் நிலங்களை வழங்க முன்வந்துவிட்டனா். இதையடுத்து, நிலஉரிமையாளா்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, அலங்காநல்லூா் அருகே உள்ள பண்ணைக்குடி ஊராட்சியில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி நில உரிமையாளா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். சாலை அமையும் தங்களது நிலத்தில் அமா்ந்து வாயில் கறுப்புத் துணி கட்டி அவா்கள் ஆா்ப்பாட்டம் செய்தனா். கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு ஒரே மாதிரி இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.
இதைத் தொடா்ந்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் ராஜசேகா், டிஎஸ்பி பாலசுந்தரம், வாடிப்பட்டி வட்டாட்சியா் பழனிக்குமாா் உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனா்.