மதுரையில் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 டன் ரேஷன் அரிசி மற்றும் கோதுமையை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
மதுரை மாவட்டத்தில் அதிகரித்து வரும் ரேஷன் பொருள் கடத்தலைத் தடுக்க உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு (சிஐடி) கூடுதல் டிஜிபி ஆபாஷ்குமாா் அறிவுறுத்தலின் படி, மதுரை மண்டல காவல் கண்காணிப்பாளா் எம்.பாஸ்கரன் உத்தரவின் பேரில் போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா். இந்நிலையில், ரேஷன் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின்பேரில் ஐராவதநல்லூா் - கல்லம்பல் சாலை, சுண்ணாம்பு காளவாசல் பகுதியில் உள்ள கிட்டங்கியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை போலீஸாா் சோதனை செய்தனா்.
அப்போது, 16 டன் ரேஷன்அரிசி 319 மூட்டைகளிலும், 4.5 டன் ரேஷன் கோதுமை 92 மூட்டைகளிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, போலீஸாா் கிட்டங்கி உரிமையாளா் மேல அனுப்பானடியைச் சோ்ந்த முத்து (43) என்பவரிடம் விசாரித்தனா். இதில், உசிலம்பட்டியைச் சோ்ந்த வியாபாரிகள் மகாராஜன், மணி, பழனி ஆகியோரிடம் ரேஷன் பொருள்களை வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து முத்துவை கைது செய்தனா். கிட்டங்கியில் இருந்த 20.50 டன் ரேஷன் பொருள்கள், 200 சாக்குகள் மற்றும் 119 நெகிழிப் பைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.