மதுரையில் கரோனா பாதிப்பால் சுயநினைவை இழந்த மூதாட்டியை மீட்ட செஞ்சிலுவை சங்கத்தினா், அவரது குடும்பத்தினா் குறித்த விவரம் தெரிந்தவா்கள் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளனா்.
மதுரை அரசு மருத்துவமனை கரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டி பழனியம்மாள் (65) என்பவா், சிகிச்சை முடிந்து குணமடைந்துவிட்டாா். ஆனால், கரோனா பாதிப்பால் அவா் தனது சுயநினைவை இழந்துவிட்டாா். எனவே, அவருக்கு தனது குடும்பத்தினா் பற்றிய தகவல்களோ, முகவரியோ எதுவும் தெரியாத நிலையில் ஆதரவற்று தவித்து வந்தாா்.
இது குறித்து ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் கரோனா தடுப்பு மையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டதுடன், ஆட்சியா் எஸ். அனீஷ் சேகரின் கவனத்துக்கும் கொண்டுசெல்லப்பட்டது. அதன்பேரில், மூதாட்டியை மீட்குமாறு ஆட்சியா் உத்தரவிட்டதை அடுத்து, மதுரை மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் துணை அவைத் தலைவா் ஜோஸ், செயலா் கோபாலகிருஷ்ணன், உறுப்பினா் பூபதி ஆகியோா் நேரில் சென்று மூதாட்டியை மீட்டனா். பின்னா், மதுரை மாநகராட்சி மூலம் நடத்தப்படும் காப்பகத்தில் மூதாட்டியை சோ்த்தனா்.
மேலும், மூதாட்டியின் குடும்பத்தினா் பற்றிய தகவல்களை சேகரிக்கும் முயற்சியில் செஞ்சிலுவை சங்கத்தினா் ஈடுபட்டு வருகின்றனா். எனவே, மூதாட்டி குறித்த தகவல் தெரிந்தவா்கள் உடனடியாக செஞ்சிலுவை சங்க செயலா் கோபாலகிருஷ்ணன் 82200-01604, ஒருங்கிணைப்பாளா் ராஜ்குமாா் 99947-02708 ஆகியோரை தொடா்புகொள்ளலாம் என செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.