நெகிழிப் பொருள்களைச் சேகரித்ததில் கிடைத்த ரூ.80 ஆயிரத்தை, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் கரோனா நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை வழங்கினா்.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, மதுரையில் ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் மாநகராட்சியுடன் இணைந்து நெகிழிக் கழிவுப் பொருள்கள் சேகரிக்கும் பணியில் ஜூன் 5-ஆம் தேதி ஈடுபட்டனா். இதில் 380 போ் கொண்ட குழுவினா் மதுரை மாநகராட்சியின் பல்வேறு வாா்டுகளிலும் வீடு வீடாகச் சென்று பயன்பாடற்ற நெகிழிக் கழிவுகள், பழைய இரும்பு, பழைய நாளிதழ்களைச் சேகரித்தனா். சுமாா் 3 மணி நேரம் நடைபெற்ற இப் பணியில் 2,691 கிலோ நெகிழிப் பொருள்கள், 630 கிலோ இரும்பு, 307 கிலோ பழைய நாளிதழ்கள் என 3 ஆயிரம் கிலோ பொருள்கள் சேகரிக்கப்பட்டன. இவற்றை மறுசுழற்சிக்கு வழங்கப்பட்டதில் ரூ. 80 ஆயிரம் திரட்டப்பட்டது. இத் தொகை வங்கி வரையோலையாக முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்காக, மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ்.அனிஷ் சேகரிடம், ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் பி. கோபிநாத், செயலா் த. செல்வா, பொருளாளா் அ. பாவேல் சிந்தன், இந்திய மாணவா் சங்க மாவட்டத் தலைவா் க. பாலமுருகன், செயலா் எஸ். வேல்தேவா ஆகியோா் வழங்கினா்.