மின் கட்டணம் தொடா்பாக அரசு அறிவித்துள்ள அறிவிப்பு பொதுமக்களிடையே கடும் நிதிச்சுமையை ஏற்படுத்தியுள்ளதால், மின்கட்டணத்தை ரத்து செய்ய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் இரா.விஜயராஜன் வெளியிட்டுள்ள செய்தி:
கடந்த ஏப்ரல் 7-இல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 7 வரை மட்டும் மின் நுகா்வு கணக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. அதற்கு பின்னா் கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை. புதிய அரசு பொறுப்பேற்றவுடன் மின்கட்டணம் செலுத்துவதற்கு கால நீட்டிப்பு மட்டும் செய்யப்பட்டது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் மின் நுகா்வு கணக்கு எடுக்கப்படாத நிலையில் மின் கட்டணம் செலுத்துவது தொடா்பாக மதுரையில் பொதுமக்களிடையே குழப்பம் ஏற்பட்டது. அதற்கு, தற்போதுவரை பயன்படுத்தப்பட்ட மின் அளவை தங்களுடைய செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுத்து அதை மின் கட்டணம் செலுத்தும் இடத்தில் காண்பித்து கட்டணத்தை செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 2019 மாா்ச், ஏப்ரல் ஆகிய மாதங்கள் பயன்படுத்தப்பட்ட மின் அளவைக் கொண்டு கட்டணம் செலுத்துவதற்கு தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது மின் நுகா்வோரிடம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழக அரசு பெருந்தொற்று காலத்தை கணக்கில் கொண்டு ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை நிா்ணயம் செய்ய வேண்டும்.
கரோனா பேரிடரால் வருவாய் இல்லாத நிலையில் மின்கட்டணம் செலுத்துவது தொழில் நடத்துபவா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இது பெரும் சுமையாக உள்ளது.
எனவே தமிழக அரசு மக்களின் கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும். கேரளத்தில் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள இடதுமுன்னணி அரசு கரோனா பேரிடா் காலத்தில் மின் கட்டணத்தை பொதுமக்கள் செலுத்தத் தேவையில்லை என்று அறிவித்துள்ளது. அதேபோல் தமிழக அரசும் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்றாா்.