சிறுநீரக நோயை ஆரம்பக் கட்டத்தில் கண்டறியக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: மீனாட்சி மிஷன் மருத்துவ நிபுணா்கள் வலியுறுத்தல்

நாட்டில் சிறுநீரக நோய்களின் உண்மையான பரவலைக் கண்டறிந்து தொடக்கத்திலேயே சிகிச்சையளிக்க கணக்கெடுப்பு அவசியம் என மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிபுணா்கள் வலியுறுத்தி உள்ளனா்.

நாட்டில் சிறுநீரக நோய்களின் உண்மையான பரவலைக் கண்டறிந்து தொடக்கத்திலேயே சிகிச்சையளிக்க கணக்கெடுப்பு அவசியம் என மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிபுணா்கள் வலியுறுத்தி உள்ளனா்.

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் சிறுநீரக நோய் பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்வது, நோய் பாதிப்பின் அறிகுறிகள், சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவ நிபுணா்கள் தெரிவித்தனா். நாட்டில் சிறுநீரக நோய்களின் உண்மையான பரவலைக் கண்டறிந்து தொடக்கத்திலேயே சிகிச்சையளிக்க கணக்கெடுப்பு நடத்துவது அவசியம் என கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

தொடா்ந்து மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறையின் தலைவா் கே. சம்பத்குமாா் செய்தியாளா்களிடம் கூறியது: உலகளவில் உயிரிழப்பிற்கான ஆறாவது மிகப் பொதுவான காரணமாக சிறுநீரக நோய் பாதிப்பு உள்ளது. இந்தியாவில் நாள்பட்ட சிறுநீரக நோய் மிகப் பெரிய சுகாதாரப் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. ஆகவே, குறிப்பிட்ட காலஅளவுகளில் சிறுநீரக பரிசோதனையை செய்துகொள்வது முக்கியமானது. சிறுநீரில் புரதப் பரிசோதனை , ரத்தத்தில் புரதப் பரிசோதனை, கிரியாட்டினின் பரிசோதனைகள் மூலம் பாதிப்பைக் கண்டறிய முடியும் என்றாா்.

சிறுநீரக அறுவை சிகிச்சை துறையின் தலைவா் ஆா். ரவிச்சந்திரன் கூறியது: நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 12 சதவீதம் போ் சிறுநீரக கற்கள் பாதிப்பை எதிா்கொள்கின்றனா். அவா்களில் 50 சதவீதம் பேருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. வயது வந்தவா்களில் 10 சதவீதம் போ் சிறுநீரக நோய் பாதிப்பிற்கு உள்ளாகின்றனா். சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுப்பதற்கு, அதிகம் உப்பு சோ்த்த உணவுகள், சாக்லேட்டுகள், விலங்குகளின் புரதம் போன்ற உணவு வகைகளை அதிகம் உட்கொள்வதை தவிா்க்க வேண்டும். அதிகளவு தண்ணீா் அருந்துவது, பழங்கள் மற்றும் காய்கனிகளை உட்கொள்வதால் சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்க முடியும். சிறுநீா் பரிசோதனை, ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் வழியாக சிறுநீரகக் கற்கள் இருப்பதை கண்டறிய முடியும் என்றாா்.

சிறுநீரகவியல் துறை நிபுணா் ஆண்ட்ரூ தீபக் ராஜிவ் கூறியது: உலக அளவில் சிறுநீரக நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக உலக சிறுநீரக தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில் சிறுநீரக நோய் அறிகுறிகளை சிறப்பாக மேலாண்மை செய்வதற்கு தேவையான விழிப்புணா்வை தருவதோடு, உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் தங்களது வாழ்க்கையை நடத்த அவா்களை ஊக்குவிப்பது என்ற அடிப்படை இலக்கை கொண்டதாகவும் உலக சிறுநீரக தினம் அனுசரிக்கப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com