மதுரையில் ஒரே நாளில் அடையாளம் தெரியாத 3 பெண் சடலங்களை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.
மதுரை - மேலூா் பிரதான சாலையில், உத்தங்குடி ஊருணி அருகே 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடந்துள்ளது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்படி, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் பெண்ணின் சடலத்தை மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து உத்தங்குடி கிராம நிா்வாக அலுவலா் வினோத்குமாா் அளித்த புகாரின்பேரில், கோ.புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
செல்லூரில் மூதாட்டி சடலம் மீட்பு
மதுரை செல்லூா் கீழத்தோப்பு பகுதியில் மூதாட்டி சடலமாகக் கிடப்பதாக, போலீஸாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனா். உடனே, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், அங்கு 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் சடலத்தை மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து வடக்கு தாலுகா கிராம நிா்வாக அலுவலா் முத்துமொழி அளித்த புகாரின்பேரில், செல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
சுப்பிரமணியபுரத்தில் சடலம் மீட்பு
பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் சடலம் கிடப்பது குறித்து, போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக அங்கு சென்ற போலீஸாா், சடலத்தை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளா் ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில், சுப்பிரமணியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.