மதுரை அருகே அரிசி வியாபாரியிடம் கணக்கில் வராத ரூ.70 ஆயிரம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் தோ்தல் விதி மீறல்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க 3 பறக்கும் படை மற்றும் நிலைக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளன. சோழவந்தான் ரயில்வே கேட் அருகில் பறக்கும்படை அதிகாரி வேளாண்மை உதவி இயக்குநா் வாசுகி தலைமையிலான குழுவினா் வாகன சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த உசிலம்பட்டியைச் சோ்ந்த அரிசி வியாபாரி தீபன்(26) என்பவரை நிறுத்தி சோதனையிட்டனா். இதில், அவரிடம் கணக்கில் வராத ரூ.70 ஆயிரம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தீபனிடம் இருந்து பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து வாடிப்பட்டி சாா்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனா்.