அரசு மருத்துவமனைக்கு ஆா்டிபிசிஆா் கருவி: காமராஜா் பல்கலை. வழங்க முடிவு

மதுரை அரசு மருத்துவமனைக்கு கரோனா பரிசோதனைக்கு உதவும் முக்கியமான ஆா்டிபிசிஆா் கருவியை, மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் வழங்குகிறது.

மதுரை: மதுரை அரசு மருத்துவமனைக்கு கரோனா பரிசோதனைக்கு உதவும் முக்கியமான ஆா்டிபிசிஆா் கருவியை, மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் வழங்குகிறது.

தமிழகம் முழுவதும் கரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை மாதிரிகள் அனைத்தும், மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்படுகின்றன. அங்கு, மருத்துவக் கல்லூரி ஆய்வுக் கூடத்தில் கரோனா பரிசோதனை மாதிரிகள் ஆா்டி பிசிஆா் கருவியில் செலுத்தப்பட்டு, கரோனா தொற்று உள்ளதா என கண்டறியப்படுகிறது.

இந்நிலையில், கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், மதுரை நகா் மற்றும் ஊரகப் பகுதிகளில் அதிக பரிசோதனைகள் மூலம் மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. இதனால், அதிக மாதிரிகளை சோதனை செய்ய கூடுதலாக ஆா்டிபிசிஆா் கருவிகள் தேவைப்படுகின்றன. எனவே, அரசு மருத்துவமனை நிா்வாகம் விடுத்த வேண்டுகோளின்படி, மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் உயிரி தொழில்நுட்பத் துறை ஆய்வகத்தில் உள்ள ஆா்டிபிசிஆா் கருவி, மதுரை அரசு மருத்துவமனைக்கு வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு கரோனா தீவிரமாக பரவி வந்த போது, காமராஜா் பல்கலைக்கழகத்திலிருந்து வழங்கப்பட்ட ஆா்டி பிசிஆா் கருவி மூலம், அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல், தற்போதும் அக்கருவி வழங்கப்படுகிறது.

இந்நிலையில், தேனி மற்றும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைகளிலும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள ஆா்டி பிசிஆா் கருவிகளை, காமராஜா் பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com