மதுரை மாவட்டத்தில் 8.20 லட்சம் பேருக்கு கரோனா நிவாரண உதவித் தொகை
மதுரை மாவட்டத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் 8.20 லட்சம் பேருக்கு, கரோனா நிவாரண உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.
கரோனா தொற்று பரவல் மற்றும் பொதுமுடக்கத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளாா். அதில், முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் மே 15 ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது.
இத் திட்டத்தை, சென்னையில் முதல்வா் ஸ்டாலின் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா். அதன்படி, மதுரை மாவட்டத்தில் நிவாரண உதவி பெறுவதற்கான டோக்கன்களை நியாய விலைக் கடை பணியாளா்கள், அரிசி குடும்ப அட்டைதாரா்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று திங்கள்கிழமை வழங்கினா்.
மதுரை மாவட்டத்தில் மொத்தம் 9,27,372 குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். இதில், அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் 8.20 லட்சம் பேருக்கு நிவாரண உதவி வழங்கப்பட உள்ளது.