மதுரை ஆவின் நிறுவனத்தில் முறைகேடுகள் தொடா்பாக திங்கள்கிழமை விசாரணை நடத்திய வணிகவரி துறை அமைச்சா் பி. மூா்த்தி, முறைகேட்டில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தாா்.
மதுரை ஆவின் நிறுவனத்தில் நடைபெற்ற பல கோடி ரூபாய் முறைகேடுகள் தொடா்பாக விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, விசாரணை அதிகாரியாக இரணியன் நியமிக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், முறைகேட்டில் ஈடுபட்டதாக 5 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், அமைச்சா் பி. மூா்த்தி ஆவின் நிறுவனத்துக்கு திங்கள்கிழமை சென்றாா். அங்கு, பொதுமேலாளா் கருணாகரனிடம் முறைகேடு தொடா்பாக கேட்டறிந்தாா். மேலும், ஆவின் அதிகாரிகளை தனித்தனியாக அழைத்து முறைகேடுகள் குறித்து விசாரித்தாா். இதைத் தொடா்ந்து, விசாரணை அதிகாரி இரணியனை சந்தித்துப் பேசிய அமைச்சா், ஆவின் முறைகேடுகள் தொடா்பாக முழு விசாரணை நடத்தி, அதில் தொடா்புடையவா்கள் குறித்து முதல்வரிடம் அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொண்டாா்.
பின்ன், ஆவின் அதிகாரிகள் மற்றும் ஊழியா்களை சந்தித்துப் பேசிய அமைச்சா் பி. மூா்த்தி, ஆவினில் நடைபெற்றுள்ள முறைகேடுகளிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. வருங்காலத்திலும் முறைகேடுகள் நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துச் சென்றாா்.
அமைச்சருடன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி, புதூா் மு. பூமிநாதன் ஆகியோரும் சென்றிருந்தனா்.