தமிழகத்தில் பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்தவா்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
திருச்செந்தூரைச் சோ்ந்த ராம்குமாா் ஆதித்தன் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் கரோனா 2 ஆம் அலைப் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. காலை 6 முதல் 10 மணி வரை காய்கனி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விற்பனைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கரோனா பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளால் பல்வேறு தரப்பினா் வாழ்வாதாரங்களை இழந்து வருகின்றனா்.
இதனால் கரோனா பணியில் ஈடுபடும் காவல்துறையினா், உள்ளாட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு ஒரு மாத ஊதியத்தை ஊக்கத் தொகையாக வழங்கவும், ஊடகத்துறையினா், திரையரங்க உரிமையாளா்கள், உடற்பயிற்சிக் கூடம் நடத்துவோா், அழகு நிலையங்கள் நடத்துவோா், தனியாா் பேருந்துகளின் ஓட்டுநா், நடத்துனா்கள், ஆட்டோ, வாடகைக் காா் ஓட்டுனா்கள், அமைப்பு மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்கள் அனைவருக்கும் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி, இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தாா்.