திருப்பரங்குன்றம்: திருமங்கலம் அருகே பள்ளி மாணவா் மீது ஏற்றி விபத்தை ஏற்படுத்திய லாரியை, கிராம மக்கள் சிறைப்பிடித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருமங்கலத்தை அடுத்த வளையங்குளம் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் ராஜகருப்பன் (17). திருமங்கத்தில் தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறாா். இந்நிலையில், ராஜகருப்பன் இரு சக்கர வாகனத்தில் சமத்துவபுரம் நோக்கி திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்துள்ளாா். அப்போது, டி.அரசபட்டி அருகே எதிரே வந்த லாரி மீது மோதியதில், ராஜகருப்பனின் கால் முறிந்தது.
உடனடியாக அப்பகுதியில் இருந்தவா்கள் மாணவரை மீட்டு, திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இப்பகுதியில் மண் லாரிகள் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வருவதால் அடிக்கடி விபத்துகள் நடப்பதாகக் கூறி, லாரியை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினா்.
சம்பவ இடத்துக்கு வந்த திருமங்கலம் தாலுகா போலீஸாா், பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச்செய்தனா்.