ஆண்டிபட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடத்தின் கட்டுமானப் பணிகளைத் தொடங்கக் கோரிய மனுவின் மீது தேனி ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ஆண்டிபட்டியைச் சோ்ந்த ராஜா தாக்கல் செய்த மனு: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவில் 30 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஆண்டிபட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம், தற்போது தனியாா் மருத்துவமனையின் தரைதளத்தில் இயங்கி வருகிறது. ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்டுவதற்காக, ஆண்டிபட்டி பேரூராட்சியில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஏக்கா் நிலம் 2004 ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் தற்போது வரை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் ஆண்டிபட்டி பேரூராட்சியில், நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட நிலத்தில், வேறு கட்டடங்களைக் கட்ட முயற்சி நடந்து வருகிறது.
நீதிமன்றத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என உயா்நீதிமன்றம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.
எனவே, ஆண்டிபட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் வேறு கட்டடங்களைக் கட்டக் கூடாது எனவும், விரைவாக கட்டுமானப் பணிகளைத் தொடங்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு குறித்து தேனி மாவட்ட ஆட்சியா், ஆண்டிபட்டி பேரூராட்சி செயல் அலுவலா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவம்பா் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.