கலப்படம் செய்யப்பட்ட பனை வெல்லம், பனங்கற்கண்டு தயாரிப்புகளுக்குத் தடை கோரிய மனுவை ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சோ்ந்த சந்திரசேகரன் தாக்கல் செய்த மனு: பனை மரத்தின் ஒவ்வொரு பாகமும் பயன்படுவதோடு, அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் பொருள்கள் மருத்துவ குணம் நிறைந்தவையாக உள்ளன. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகா் ஆகிய மாவட்டங்களில் பனை சாா்ந்த தொழில்கள் அதிகம். பனங்கூழ், பனம்பழம், பனைவெல்லம் ஆகியவற்றிலிருந்து பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி, வேம்பாா் பகுதிகளில் தயாரிக்கப்படும் பனை வெல்லம் மற்றும் பனங்கற்கண்டு மிகவும் பிரசித்திப் பெற்றவை. ஆனால், சா்க்கரை பாகு, சா்க்கரை ஆகியவற்றோடு சில ரசாயனங்களைச் சோ்த்து பனை வெல்லம், பனங்கற்கண்டு போன்ற தோற்றம் மற்றும் வாசனையுடைய தயாரிப்புகளை பலரும் விற்பனை செய்கின்றனா். உடன்குடி பகுதியில் மாதம்தோறும் 120 டன் சா்க்கரை விற்பனையாகிறது. இதன் மூலம் சா்க்கரை கலப்படத்திற்கும் பயன்படுத்தப்படுவது உறுதியாகிறது.
எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் சா்க்கரை, சா்க்கரை பாகு ஆகியவற்றைக் கலப்படம் செய்து தயாரிக்கப்படும் பனைவெல்லம், பனங்கற்கண்டு ஆகியவற்றுக்குத் தடை விதிக்கவும், கலப்படம் செய்பவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பா் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.