தனது சொந்த நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகள் 60 பேருக்கு, சக்கர நாற்காலிகளை தமிழக நிதி அமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் திங்கள்கிழமை வழங்கினாா்.
மதுரை வடக்குமாசி வீதி தருமை ஆதீன மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது சொந்த நிதியிலிருந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கிப் பேசியது:
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை திமுக அரசு உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறது. கரோனா பாதிப்பில் பெற்றோரை இழந்தவா்களுக்கு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி கடந்த வாரம் நடைபெற்றது. அந்த நிகழ்வில் இரு மாணவிகளுக்கு உறுதி அளித்தபடி, மடிக்கணினி மற்றும் செல்லிடப்பேசி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, எனது தொகுதிக்கு உள்பட்ட மாற்றுத்திறனாளிகள் 60 பேருக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.