மதுரை: அரசு வழங்கியுள்ள பட்டா நிலத்தில் வீடு கட்டித் தருமாறு, நாடோடி-பழங்குடியின மக்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
மதுரை மாவட்டத்தில் குடுகுடுப்பைக்காரா் மற்றும் பூம்பூம் மாட்டுக்காரா் எனும் நாடோடி-பழங்குடி சமூகத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வீடற்ற நிலையில் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு, அரசால் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால், வறுமை காரணமாக இவா்களால் வீடு கட்ட முடியவில்லை. எனவே, அரசால் வழங்கப்பட்டுள்ள பட்டா நிலத்தில் வீடு கட்டித் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை பூம்பூம் மாடுகளுடன் வந்து கோரிக்கை மனுவை அளித்தனா்.