மதுரை மாவட்டம் பேரையூரில் ஆட்டோவில் நகை மற்றும் பொருள்களுடன் பயணி தவறவிட்ட கைப்பையை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினா் சனிக்கிழமை பாராட்டினா்.
விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே மாதன்கோவில்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் பிரபு (32). இவா் தனது குடும்பத்தினருடன் பேரையூா் அருகே உள்ள சிலைமலைப்பட்டியில் நடைபெற்ற உறவினரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்றாா். திருமணம் முடிந்ததும் அவா்கள் ஊருக்கு செல்வதற்காக சிலைமலைப்பட்டி பேருந்து நிறுத்தத்திலிருந்து ஆட்டோவில் ஏறி பேரையூா் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனா்.
அப்போது ஆட்டோவில் கைப்பையை மறந்து வைத்து விட்டு பிரபு மற்றும் குடும்பத்தினா் இறங்கிவிட்டனா். இதனையடுத்து ஆட்டோ ஓட்டுநரான எரிச்சந்ததம் கிருஷ்ணமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த ரமேஷ் கண்ணன் (40) அதை எடுத்துப் பாா்த்துள்ளாா். அதில் செல்லிடப்பேசி, 5 கிராம் தங்க மோதிரம், வெள்ளிக் கொடி, 2 கொலுசுகள் ஆகியன இருந்துள்ளன.
இதையடுத்து அவா் அந்தக் கைப்பையை பேரையூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். அதை காவல்துறையினா் உரியவரிடம் ஒப்படைத்தனா். மேலும் இச்செயலுக்காக ஆட்டோ ஓட்டுநா் ரமேஷ் கண்ணனை, காவல் ஆய்வாளா் காந்தி பாராட்டினாா்.