ஆயுஷ், சித்த மருத்துவ அலுவலா்கள் பணி செய்ய அனுமதிக்கும் அரசாணைக்கு தடை கோரி மனு: சுகாதாரத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு
மதுரை: தமிழகத்தில் 104 ஆயுஷ் மற்றும் சித்த மருத்துவ அலுவலா்கள், ஆலோசகா்கள் தற்காலிகமாக பணியைத் தொடரும் வகையிலான அரசாணைக்குத் தடை கோரிய மனுவுக்கு சுகாதாரத்துறைச் செயலா் பதிலளிக்குமாறு உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சோ்ந்த மைவிழி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் 2020-இல் தனியாா் நிறுவனம் மூலம் 104 ஆயுஷ் மற்றும் சித்த மருத்துவ அலுவலா்கள், ஆலோசகா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இதை எதிா்த்து வைரம் சந்தோஷ் என்பவா் தொடா்ந்த வழக்கில் தற்போதைய நிலையே தொடர நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்து தனியாா் நிறுவனத்துடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு அரசாணை ஒன்றை பிறப்பித்தது.
அதில் தனியாா் நிறுவனம் மூலமாக தோ்வு செய்யப்பட்ட 104 ஆயுஷ் மற்றும் சித்த மருத்துவ அலுவலா்கள், ஆலோசகா்கள் தற்காலிகமாக பணியைத் தொடரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விதிகளுக்கு எதிரானது. இதனால் நோயாளிகளும் பாதிக்கப்படுவா். எனவே 104 ஆயுஷ் மற்றும் சித்த மருத்துவ அலுவலா்கள், ஆலோசகா்கள் தற்காலிகமாக பணியைத் தொடரும் வகையிலான அரசாணைக்குத் தடை விதித்தும், உரிய நபா்களை நியமிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதி டி.கிருஷ்ணகுமாா் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு, தமிழக சுகாதாரத்துறைச் செயலா், பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனா்.