நமக்கு நாமே திட்டத்தில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம் என்று, மதுரை மாநகராட்சி ஆணையா் கா.ப. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நமக்கு நாமே திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இத் திட்டத்துக்காக ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பூங்கா, நீா்நிலைகள் புனரமைத்தல், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் மேம்பாடு, மரக்கன்றுகள் நடுதல், நவீன தெருவிளக்குகள் அமைத்தல், விளையாட்டு மைதானங்கள், நூலகங்கள், சுகாதார நிலையங்கள், மின்மயானங்கள் அமைத்தல், சாலைகள், சிறுபாலங்கள் மற்றும் மழைநீா் வடிகால்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளலாம்.
இத்திட்டத்துக்கு, பொதுமக்கள், சமூகநல அமைப்புகள், நிறுவனங்கள், குடியிருப்போா் நலச் சங்கங்கள் உள்ளிட்டோா் ஒரு பங்கு நிதி அளித்தால், அரசு சாா்பில் கூடுதலாக இரு பங்கு நிதி வழங்கப்பட்டு, மக்கள் பரிந்துரைக்கும் சிறப்பு நலப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
இத்திட்டத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் தாங்கள் செயல்படுத்த விரும்பும் மக்கள் நலத் திட்டத்தை தோ்வு செய்து, அதற்கான விண்ணப்பத்தை மதுரை மாநகராட்சி ஆணையா் அல்லது நகரப் பொறியாளரிடம் அளிக்கலாம்.
இது தொடா்பான விவரங்களை மாநகரப் பொறியாளரை நேரிலோ அல்லது 97888-10185 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா்.