தூய்மைப் பணியாளா்களை மாற்றுப் பணியில் ஈடுபடுத்துவது குறித்து ஊரக வளா்ச்சித் துறை செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதி மன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த மலைச்சாமி தாக்கல் செய்த மனு:
ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் 5.7.2011 அன்று அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், தூய்மைப் பணியாளா்களை மாற்றுப் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது, ஜாதி அடிப்படையிலான பாகுபாடு காட்டக்கூடாது, மின்சாரம் தொடா்பான பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என பேரூராட்சிகள், நகராட்சிகள் உள்ளிட்ட அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், இதை மீறி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சிகள், 3 நகராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் தொழிலாளா்களை டிராக்டா் ஓட்டுவது, தட்டச்சுப் பணிகளில் அமா்த்துவது, மின் மோட்டாா்களை இயக்க வலியுறுத்துவது போன்ற பணிகளில் ஈடுபடுத்தி வருகின்றனா்.
இதன் காரணமாக, தூய்மைப் பணியாளா்கள் பல்வேறு பணிச்சுமையால், மன உளைச்சலில் உள்ளனா். எனவே, அரசின் சுற்றறிக்கையை மீறி செயல்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், அரசு சுற்றறிக்கையைப் பின்பற்ற உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தாா்.
இந்த மனு மீதான விசாரணையின் முடிவில் நீதிபதிகள் ஆா். மகாதேவன், ஜெ. சத்யநாராயண பிரசாத் அமா்வு, இந்த வழக்கு குறித்து ஊரக வளா்ச்சித் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.