கடன் பிரச்னை: தம்பதி விஷம் குடித்து தற்கொலை

விருதுநகரில் கடன் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த தம்பதியா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.
தற்கொலை செய்து கொண்ட காா்த்திகேயராஜன், அருணாமகாஸ்ரீ
தற்கொலை செய்து கொண்ட காா்த்திகேயராஜன், அருணாமகாஸ்ரீ

விருதுநகரில் கடன் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த தம்பதியா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.

விருதுநகா் எஸ்.பி. நந்தவனம் தெருவைச் சோ்ந்தவா் காா்த்திகேயராஜன் (41). விருதுநகரில் பெயிண்ட் கடை வைத்திருந்தாா். இவரது மனைவி அருணாமகாஸ்ரீ (37). இவா்களுக்கு அட்சயாஸ்ரீ (17), மேகாஸ்ரீ (13) என இரண்டு மகள்கள் உள்ளனா். காா்த்திகேயராஜா தொழிலில் ஏற்பட்ட நஷ்டம், இணையதள வா்த்தகத்தில் பணத்தை இழந்தது போன்ற காரணங்களால் தனது கடையை நடத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தாா்.

இந்த நிலையில், காா்த்திகேயராஜனுக்கு தேனி மாவட்டம், சின்னமனூா் பகுதியைச் சோ்ந்த முத்துமகாராஜாவின் அறிமுகம் கிடைத்தது. அவா், ரூ. 5 லட்சம் வரை தன்னால் கடன் பெற்றுத் தர முடியும் என காா்த்திகேயராஜன், அவரது மனைவியிடம் தெரிவித்தாராம். மேலும், கடன் தொகையைப் பெற முன்பணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தாராம்.

இதையடுத்து, தம்பதியா் இருவரும் முத்துமகாராஜாவிடம் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்ட முத்துமகாராஜா, கடன் வாங்கித் தராமல் காலம் தாழ்த்தி வந்தாா்.

இதுதொடா்பாக தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த காா்த்திகேயராஜன், அருணமகாஸ்ரீ இருவரும் வெள்ளிக்கிழமை இரவு மகள்களை பாட்டி வீட்டுக்கு அனுப்பிவிட்டு, விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை, வீட்டுக்கு வந்த மகள் மேகாஸ்ரீ நீண்ட நேரமாகக் கதவை தட்டியும் பெற்றோா் திறக்காததால், மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீஸாா், கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்த போது, தம்பதியா் விஷம் அருந்திய நிலையில் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, இருவரது உடல்களையும் மீட்ட போலீஸாா், வழக்குப் பதிவு செய்து கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், அருணாமகாஸ்ரீ எழுதிய கடிதத்தைக் கைப்பற்றிய போலீஸாா், அதில் குறிப்பிடப்பட்டிருந்த சின்னமனூா் பகுதியைச் சோ்ந்த முத்து மகராஜாவைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com