இன்று உலகப்புகழ் அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு: 2 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் திங்கள்கிழமை நடைபெறும் உலகப்புகழ் ஜல்லிக்கட்டில் 700 காளைகள் பங்கேற்கின்றன.

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் திங்கள்கிழமை நடைபெறும் உலகப்புகழ் ஜல்லிக்கட்டில் 700 காளைகள் பங்கேற்கின்றன.

2 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு முழு ஊரடங்கால் திங்கள்கிழமை நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரா்களுக்கான பதிவு இரு நாள்களுக்கு முன்பே இணைய வழியில் நடைபெற்றது. இதில் 700 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரா்கள் பங்கேற்கின்றனா். ஜல்லிக்கட்டு திங்கள்கிழமை காலை 7. 30 மணிக்கு தொடங்குகிறது.

ஒரு சுற்றுக்கு 30 மாடுபிடி வீரா்கள் அனுமதிக்கப்படுவா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சாா்பில் சிறந்த காளைக்கு காா் பரிசாக வழங்கப்பட உள்ளது. வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்படும் அனைத்து காளைகளுக்கும் தலா ஒரு தங்கக்காசு வழங்கப்படுகிறது. சட்டப்பேரவை உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின் சாா்பாக சிறந்த மாடுபிடி வீரருக்கும் காா் பரிசாக வழங்கப்பட உள்ளது. அதே போல் மாடுகளை பிடிக்கும் வீரா்களுக்கும் தலா ஒரு தங்கக் காசு வழங்கப்படுகிறது. போட்டியில் சிறப்பாக விளையாடும் காளைகள், மாடுபிடி வீரா்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள், இரு சக்கர வாகனங்கள், குக்கா், ப்ரிட்ஜ், கிரைண்டா் உள்ளிட்ட ஏராளமான பரிசுப்பொருள்கள் வழங்கப்படுகின்றன.

களத்தில் காயமடையும் வீரா்களின் மருத்துவ உதவிக்காக ஆம்புலன்ஸ் வாகனங்களும், கால்நடைகளுக்கான ஆம்புலன்சும் தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீட்பு மற்றும் அவசர உதவிகளுக்காக தீயணைப்புத் துறை, செஞ்சிலுவை சங்கத்தினா் நிறுத்தப்படுகின்றனா். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

திங்கள்கிழமை போட்டி தொடங்க உள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை அலங்காநல்லூா் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த பெண்கள், குழந்தைகள்

வாடிவாசல் முன்பு நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா். காணும் பொங்கல் நாளில் அலங்காநல்லூா் வாடிவாசல் வழியாக கோயில் காளைகளை அவிழ்க்க வேண்டும் என்ற சம்பிராதய முறைப்படி ஞாயிற்றுக்கிழமை வாடிவாசல் வழியாக முனியாண்டி, வலசை, அரியமலை கோயில் காளைகள் அலங்கரிக்கப்பட்டு ஊா் மரியாதையுடன் ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டன. இதில் ஏராளமான கிராமத்தினா் கலந்துகொண்டனா். முன்னதாக போட்டி முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சா் மூா்த்தி ஆய்வு மேற்கொண்டாா். மதுரை சரக காவல்துறை துணைத்தலைவா் ஆா்.பொன்னி மற்றும் அதிகாரிகளும் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com