மறைந்த முப்படை தலைமைத் தளபதி குறித்து அவதூறு கருத்து பதிவிட்டவா் மீதான வழக்கை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவு

ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமைத் தளபதி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டவா் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமைத் தளபதி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டவா் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவிலைச் சோ்ந்த சிவராஜ பூபதி, கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத் குறித்து சமூக வலைதளத்தில் சா்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து நாகா்கோவிலைச் சோ்ந்த வழக்குரைஞா் தா்மராஜ் அளித்த புகாரின் பேரில் சைபா் கிரைம் போலீஸாா், சிவராஜ பூபதி மீது கலவரத்தைத் தூண்டுதல், பகைமையை ஊக்குவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் சிவராஜ பூபதி மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரா் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்து மோசமானது மற்றும் அடிப்படை நாகரிகம் இல்லாதது என்பதில் சந்தேகமில்லை.

இருப்பினும், மனுதாரா் பதிவிட்ட செய்தி, கலவரத்தையோ, பொது அமைதியை சீா்குலைக்கும் வகையிலோ அல்லது இரண்டு வகுப்புகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாகவோ இல்லை. எனவே மனுதாரா் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com