அரசுத் துறைகளில் தனியாா் மயத்துக்கு வழிவகுக்கும் அரசாணைகளை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியது.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மதுரை மாவட்ட பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஜெ. மூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா் ஆ. அமுதா வரவேற்றாா். மாநிலத் துணைத் தலைவா் மொ. ஞானத்தம்பி தொடங்கி வைத்துப் பேசினாா். மாவட்டச் செயலா் க. நீதிராஜா வேலை அறிக்கையையும், பொருளாளா் மு. ராம்தாஸ் வரவு- செலவு அறிக்கையையும் சமா்ப்பித்தனா்.
தமிழ்நாடு அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலா் சீனிவாசன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் வாழ்த்திப் பேசினா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநில பொதுச்செயலா் ஆ. செல்வம் நிறைவுரையாற்றினாா். மாவட்ட துணைத் தலைவா் பெ . சந்திரபாண்டி நன்றி கூறினாா்.
கூட்டத்தில், அரசு துறைகளில் தனியாா்மயத்தை புகுத்தும் அரசாணை 152, 139, 115 ஆகியவற்றை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். மதுரை மாவட்டத்தில் சத்துணவுப் பணியாளா்கள் காலிப் பணியிடங்களையும், அரசுத் துறைகள் அனைத்திலும் உள்ள காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஊழியா்களின் அகவிலைப்படி, சரண்டா் உள்ளிட்டவற்றை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். அரசு ஊழியா்களின் 21 மாத ஊதிய நிலுவையை வழங்க வேண்டும்.
புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்து உரிய காப்பீடு தொகையை வழங்க வேண்டும். அரசு அலுவலகங்களில் பெண்கள் பாதுகாப்பாக பணி செய்யும் விசாகாக்குழு அமைக்க வேண்டும்.
மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ. 11,186 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். மதுரை கப்பலூா்-திருமங்கலம் இடையே உள்ள சுங்கச் சாவடியில் உள்ளூா் வாகனங்களுக்கு வாகனக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். பெண்களுக்கான இலவசப் பேருந்துச் சேவையை காலை, மாலை நேரங்களில் அதிக அளவில் இயக்க போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த துரித நடவடிக்கை வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.