தமிழகத்தில் மது விற்பனை செய்யும் நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என்று ஏன் மாற்றக்கூடாது என அரசுக்கு, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் திங்கள்கிழமை கேள்வி எழுப்பினா்.
திருச்செந்தூரைச் சோ்ந்த ராம்குமாா் ஆதித்தன், மதுரையைச் சோ்ந்த கே.கே.ரமேஷ் ஆகியோா் தாக்கல் செய்த மனுக்கள்:
தமிழகத்தில் 21 வயதுக்குள்பட்டவா்களுக்கு மதுபானம் விற்கத் தடை விதிக்க வேண்டும். மேலும், மது விற்பனை நேரத்தை மதியம் 2முதல் 8 இரவு மணி வரை என மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும் என அதில் வலியுறுத்தியிருந்தனா்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆா். மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், தமிழகத்தில் மட்டுமே குறைவான நேரம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன என்றாா். அப்போது நீதிபதிகள் குறிக்கிட்டு, மதுபானங்கள் விற்பனையில் பிற மாநிலங்களை விட தமிழகமே முன்னிலையில் உள்ளது என்றனா்.
அதற்கு அரசுத் தரப்பில், தமிழகத்தில் மதுவின் அளவு குறைவாகவும், விலை அதிகமாகவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், தமிழக அரசு மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை என ஏன் மாற்ற பரிசீலனைச் செய்யக்கூடாது? என்றனா்.
பின்னா் அரசுத் தரப்பில், கரோனா கால கட்டத்தில் கா்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்து மது வாங்கி வந்தவா்கள் மீது ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், மது அருந்துவோா் மாற்று வழியைத் தேடி, மதுவாங்க முயற்சிக்கின்றனா். மேலும் 21 வயதிற்குட்டவா்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், மாணவா்களுக்கு மது விற்பனை 100 சதவீதம் செய்யப்படுவதில்லையா? என கேள்வி எழுப்பினா்.
அதற்கு அரசுத் தரப்பில், இந்த விஷயத்தை தமிழக அரசு தீவிரமாகக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தமிழக்ததில் 21 வயதுக்கு கீழ் உள்ளவா்களுக்கு மதுபானம் விற்பதைத் தடுப்பது தொடா்பாக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகள், அரசுக்கு வந்த பரிந்துரைகள் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை டிசம்பா் 1ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.