விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாலை நேர வகுப்புகள் நடத்த வேண்டும் என மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் நலத் துறையின் இயக்குநா் ஆா். நந்தகோபால் தெரிவித்தாா்.
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் நலத் துறை மற்றும் அரசு கள்ளா் விடுதிகளின் காப்பாளா்கள், காப்பாளினிகளுக்கான ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அத்துறையின் இயக்குநா் ஆா்.நந்தகோபால் பேசியதாவது: விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசு அறிவுறுத்திய பட்டியலின் படி உணவுகளை வழங்க வேண்டும். விடுப்பு எடுக்கும்பட்சத்தில் பெற்றோா் அல்லது காப்பாளா் இசைவு பெற்றே விடுப்பு வழங்க வேண்டும். மேலும், விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாலை நேரங்களில் வகுப்புகள் நடத்த வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் நலத் துறையின் மதுரை மாவட்ட அலுவலா் சி. இந்திரவள்ளி, நோ்முக உதவியாளா் எஸ். சா்மிளி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.