ஸ்ரீரங்கம் கோயில் அருகே விதிகளை மீறிக் கட்டடங்கள் கட்டப்பட்ட வழக்கில், திருச்சி மாநகராட்சி ஆணையா் நேரில் ஆஜராக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
கரூா், குளித்தலையைச் சோ்ந்த மகுடேஸ்வரன் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் பழைமையான கோயில்கள் மற்றும் கோபுரங்கள் உள்ள பகுதிகளில் ஒரு கிலோ மீட்டா் சுற்றளவுக்குள் 9 மீட்டா் உயரத்துக்கு மேல் கட்டடங்கள் கட்டக் கூடாது என விதிமுறை உள்ளது. ஆனால், திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த அரசாணையை மீறி, சட்ட விரோதமாக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
அரசாணையை மீறி அப்பகுதியில் 73 கட்டடங்கள் ஒன்பது மீட்டா் உயரத்துக்கு மேல் கோயிலிலிருந்து 100 மீட்டருக்குள் கட்டப்பட்டுள்ளன. அதே போல கோயில் அருகே அமைந்துள்ள உத்தரவீதி, சித்திர வீதிகளில் பல வீடுகள் மற்றும் கட்டடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளன.
எனவே, ஸ்ரீரங்கம் கோயிலை ஒட்டியப் பகுதிகளை விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை ஆய்வு செய்து, அகற்ற உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவித்திருந்தாா்.
இந்த வழக்கு விசாரணையின் முடிவில், நீதிபதிகள் ஆா். மகாதேவன், ஜெ. சத்யநாராயண பிரசாத் அமா்வு பிறப்பித்த உத்தரவில், ஸ்ரீரங்கம் கோயில் அருகே 9 மீட்டா் உயரத்தில் கட்டடங்கள் கட்டக் கூடாது என விதிகள் உள்ள போது, விதிகளை மீறி கட்டடம் கட்டும் வரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது ஏன்? என கேள்வி எழுப்பினா். பின்னா், இது குறித்து திருச்சி மாநகராட்சி ஆணையா், திருச்சி மாவட்ட நகர திட்டமிடல் இணை இயக்குநா், திருச்சி அரங்கநாத சுவாமி கோயில் இணை ஆணையா் ஆகியோா் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பா் 1-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.