மதுரை: மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 43-ஆவது வாா்டில் நடைபெற்ற சிறப்பு தூய்மைப் பணியை மேயா் வ.இந்திராணி, மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன் ஆகியோா் வியாழக்கிழமை தொடக்கி வைத்தனா்.
இதையடுத்து முனிச்சாலை பிரதான சாலை, இஸ்மாயில்புரம், சீனிவாச பெருமாள் கோயில் தெரு, வெங்கடாஜலபதி ஐயங்காா் தெரு, நியூ இங்கிலிஷ் கிளப் காலனி, ராசயனப் பட்டறை தெரு, பட்லா்கான் தெரு, குருவிக்காரன் சாலை, வைகை ஆறு தெற்கு கரையோர பகுதிகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சனிக்கிழமை வரை 3 நாள்கள் தொடா் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தப் பணியில் 85 தூய்மைப் பணியாளா்கள், 40 கொசு ஒழிப்பு பணியாளா்கள், 25 பொறியியல் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனா். மேலும் 2 கொசு ஒழிப்பு புகை பரப்பும் இயந்திரம், 2 ஜே.சி.பி. இயந்திரம், 2 மண் கூட்டும் வாகனம், 5 டிராக்டா்கள், 2 பாதாளச் சாக்கடை அடைப்பு எடுக்கும் வாகனம், 4 பேட்டரி வாகனம், 8 டிரை சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களும் இந்த சிறப்பு தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இப்பணியின் மூலம் வீடு வீடாகச் சென்று மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வாங்குதல், தெருக்களை கூட்டி சுத்தம் செய்தல், பிரதான சாலைகளில் தேங்கியுள்ள மணல்களை அள்ளுதல், தேவையற்ற குப்பைகளை அகற்றுதல், டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களில் புகை மருந்து அடித்தல் போன்ற பல்வேறு தூய்மைப் பணிகள் நடைபெற உள்ளன. நிகழ்ச்சியில் மண்டலத் தலைவா் முகேஷ்சா்மா, நகரப்பொறியாளா் அரசு, நகா்நல அலுவலா் ராஜா, உதவி ஆணையா் சுரேஷ்குமாா் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.