கோயில் குளத்தில் மூழ்கி இரு குழந்தைகள் இறந்த சம்பவம் தொடா்பாக விசாரணை கோரிய மனுவுக்கு உள்துறைச் செயலா், சிவகங்கை ஆட்சியா் பதிலளிக்குமாறு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த காயத்ரி தாக்கல் செய்த மனு: நாங்கள் நரிக்குறவா் சமூகத்தை சோ்ந்தவா்கள். திருவிழாக்களில் பொம்மைகள் விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். கடந்த ஆண்டு, சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவின்போது பொம்மை விற்பனைக்காக குடும்பத்துடன் சென்றோம். 2021 ஏப்ரல் 4 ஆம் தேதி, எங்களது மகன்கள் வெற்றிவேல் (7), குணசேகரன் (8) இருவரையும் காணவில்லை. பின்னா் கோயில் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டனா்.
இதனையடுத்து எவ்வித விசாரணையும் இல்லாமல் உடல் கூறாய்வு செய்து, காவல் துறையினா் உடல்களை எங்களிடம் ஒப்படைத்தனா். இரு குழந்தைகளும் நீரில் மூழ்கி இறந்தது குறித்து விசாரணை நடத்தவும், இழப்பீடு வழங்கக் கோரியும் 2 முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. கோயில் குளத்தில் இரு குழந்தைகளும் மூழ்கி இறந்தது குறித்து விசாரணை நடத்தவும், இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன், தமிழக உள்துறைச் செயலா், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனா்.