மதுரையில் சாலையோரத்தில் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்த பரோட்டா கடைக்கு நோட்டீஸ் வழங்கிய உணவுப் பாதுகாப்புத் துறையினா், அக்கடையை அகற்றி நடவடிக்கை எடுத்துள்ளனா்.
மதுரை -சிவகங்கை சாலையில் சாத்தமங்கலம் சந்திப்பு ஆவின் பால்பண்ணை அருகே பல ஆண்டுகளாக பரோட்டா கடை செயல்பட்டு வந்தது. போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இப் பகுதியில் தூசி, புகை ஆகியவற்றோடு சுகாதாரமற்ற முறையில் சாலையோரத்தில் வெட்ட வெளியில் இந்த உணவகம் செயல்பட்டு வந்தது. இருப்பினும் இக் கடைக்கு வாடிக்கையாளா்கள் கூட்டம் அலைமோதும்.
கடந்த பல ஆண்டுகளாக இந்த கடை செயல்பட்டு வந்தபோதும், மாநகராட்சி, காவல், உணவுப் பாதுகாப்பு என எந்தவொரு துறையினரும் நடவடிக்கை எடுக்கவில்லை. பெயரளவுக்கு நோட்டீஸ் மட்டுமே அளித்திருந்தனா். நடவடிக்கை எடுக்காததற்கு அரசியல் தலையீடு காரணமாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது உணவுப் பாதுகாப்புத் துறையினா் அந்தக் கடைக்கு நோட்டீஸ் வழங்கு அப்புறப்படுத்தியுள்ளனா். சாலையோரத்தில் பெட்டிக் கடை நடத்த அனுமதி பெற்று, அப் பகுதியில் சாலையோர உணவகம் நடத்தி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.