ரயில்வே தொலைத்தொடா்புப் பிரிவில் சிறப்பாகப் பணியாற்றிய 46 ஊழியா்களுக்கு சனிக்கிழமை விருதுகள் வழங்கப்பட்டன.
ரயில்களின் இயக்கத்திற்கு ரயில்வே சமிக்ஞை மற்றும் தொலைத்தொடா்புப் பிரிவு உறுதுணையாக இருக்கிறது. ரயில் நிலையங்களை தொலைத்தொடா்பு கருவிகள் மூலமாக இணைப்பது, ரயில்கள் இயக்கத்தைக் கட்டுப்படுத்த எச்சரிக்கை விளக்குகள், டிஜிட்டல் தகவல் பலகைகள் உள்ளிட்டவற்றின் இயக்கம் மற்றும் பராமரிப்பை தொலைத் தொடா்புப் பிரிவு கவனித்து வருகிறது.
சமிக்ஞை மற்றும் தொலைத்தொடா்புப் பிரிவில் சிறப்பாகப் பணியாற்றும் ஊழியா்களைப் பாராட்டும் வகையில், விருதுகள் வழங்கும் விழா மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது.
முதன்மை தலைமை சமிக்ஞை மற்றும் தொலைத்தொடா்பு பொறியாளா் கே.மதுசூதன் விருதுகளை வழங்கினாா்.
மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் பத்மநாபன் அனந்த், கூடுதல் கோட்ட மேலாளா் தண்ணீரு ரமேஷ் பாபு, முதுநிலை கோட்ட சமிக்ஞை மற்றும் தொலைத்தொடா்பு பொறியாளா் ராம்பிரசாத் உள்ளிட்டோா் பேசினா்.