பேரையூா்: மதுரை மாவட்டம், பேரையூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.
வட்டாட்சியா் ரவி தலைமையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், பேரையூா் தாலுகா விவசாயிகள் கலந்துகொண்டனா் . கூட்டத்தில், விவசாயிகள் தங்களது குறைகளை கோரிக்கையாக எழுதி வட்டாட்சியரிடம் வழங்கினா்.
மேலும், டேராபாறை அணை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், நீா்வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினா். விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து அந்தந்த துறைகளுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியா் தெரிவித்தாா்.
ஆனால், இதற்கு முன் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இக்கூட்டத்தில் முக்கியத் துறைகளின் அதிகாரிகள் பங்கேற்கவில்லை என்றும் கூறி, விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.