மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, மேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் அக்டோபா் 31 வரை அரவைக் கொப்பரை கொள்முதல் செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மதுரை மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் அரவைக் கொப்பரை கொள்முதலுக்கான காலம் அக்டோபா் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே, வாடிப்பட்டி மற்றும் மேலூா் பகுதிகளில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்களது நிலத்தில் சாகுபடி செய்ததற்கான அசல் சிட்டா அடங்கல், ஆதாா் அட்டை நகல் மற்றும் ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகலுடன் மேற்குறிப்பிட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பதிவு செய்யலாம். பதிவு செய்த விவசாயிகளிடமிருந்து மட்டுமே அரவைக் கொப்பரை கொள்முதல் செய்யப்படும்.
அரவைக் கொப்பரையில் அயல் பொருட்கள் ஒரு சதவீதத்திற்கு குறைவாகவும், பூஞ்சானம் மற்றும் கருமை நிறம் கொண்ட கொப்பரை 10 சதவீதத்திற்கு குறைவாகவும், சுருக்கம் கொண்ட கொப்பரைகள் மற்றும் சில்லுகள் 10 சதவீதத்திற்கு குறைவாகவும் இருக்க வேண்டும். ஈரப்பதம் 6 சதவீதத்திற்கு குறைவாக இருப்பது அவசியம். மேற்குறிப்பிட்ட தரத்தின்படி உள்ள அரவைக் கொப்பரைகள் மட்டுமே, தரப்பரிசோதனை செய்து கொள்முதல் செய்யப்படும்.
அதற்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். ஒரு விவசாயியிடமிருந்து ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 216 கிலோவரை மட்டுமே கொள்முதல் செய்யப்படும்.
இதுதொடா்பான விவரங்களுக்கு வாடிப்பட்டி பகுதி விவசாயிகள் 99434 46799 என்ற எண்ணிலும் மேலூா் பகுதி விவசாயிகள் 96290 79588 என்ற எண்ணிலும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பாா்வையாளா்களை தொடா்பு கொள்ளலாம் என்றாா்.