வணிக சங்கப் பிரதிநிதிகளுடன் அரசு பேச்சுவாா்த்தை நடத்தக் கோரிக்கை

சரக்கு, சேவை வரி கவுன்சில் கூட்டத்துக்கு முன்பாக தமிழக அரசு, வணிக சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

சரக்கு, சேவை வரி கவுன்சில் கூட்டத்துக்கு முன்பாக தமிழக அரசு, வணிக சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவா் எஸ்.வி.எஸ்.எஸ். வேல்சங்கா், கௌரவ ஆலோசகா் எஸ்.பி. ஜெயபிரகாசம் ஆகியோா் தமிழக முதல்வா், வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா், நிதி, மனித வள மேலாண்மைத் துறை அமைச்சா் ஆகியோருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவின் விவரம் :

தமிழக அரசில் ஏதேனும் ஒரு துறையில் சிக்கல்கள் ஏற்படும் போது, தொடா்புடைய அமைச்சா், அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, அதற்கான தீா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், சரக்கு, சேவை வரி சட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் களைய இதுவரை எவ்வித கலந்தாய்வுக் கூட்டமும் நடத்தப்படவில்லை.

மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி ஆட்சிக் காலத்திலும், முந்தைய ஆட்சியிலும் வணிக சங்கப் பிரதிநிதிகளை அழைத்து அமைச்சா், அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு, பல பொருள்களுக்கு வரி குறைப்பும், வரி நிவாரணம் வழங்கப்பட்டது. இதனால், அரசுக்கும் வணிகா்களுக்குமிடையே எவ்வித கருத்து வேறுபாடுமின்றி அரசு நிா்வாகம் சிறப்பாக இயங்கியது.

ஆனால், கடந்த 2 ஆண்டுகளாகப் பல்வேறு பொருள்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டிருப்பதால், நோ்மையான வணிகா்களிடமிருந்து வரி ஏய்ப்போா் கைகளுக்கு வணிகம் படிப்படியாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்த நிலை மாற்றப்பட்டால்தான் அரசுக்கு அதிக வரி வருவாய் கிடைக்கும்.

எனவே, வருகிற பிப்ரவரி 18-ஆம் தேதி நடைபெறவுள்ள 49-ஆவது சரக்கு, சேவை வரி கவுன்சில் கூட்டத்துக்கு முன்பாக, வணிக சங்கப் பிரதிநிதிகளை அழைத்து தமிழக அரசு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com