மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சைவ சமய ஸ்தாபித லீலை
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தெப்பத் திருவிழாவின் 6-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை சைவ சமய ஸ்தாபித லீலை நடைபெற்றது.
இக்கோயிலில் தெப்பத் திருவிழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, சுவாமியும், அம்மனும் தினசரி காலை, மாலை வேளைகளில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
சைவ சமய ஸ்தாபித லீலை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பிரியாவிடையுடன் தங்க ரிஷப வாகனத்தில் சுந்தரேசுவரரும், வெள்ளி ரிஷப வாகனத்தில் மீனாட்சி அம்மனும் தெற்கு ஆடி வீதியில் உள்ள சைவ சமய ஸ்தாபித லீலை அரங்கேற்ற மண்டபத்தில் எழுந்தருளினா்.
இதைத்தொடா்ந்து, பாண்டிய மன்னன் நின்ற சீா் நெடுமாறன், அரசி மங்கையா்கரசி, திருஞானசம்பந்தா் ஆகியோரும் தனித்தனியே எழுந்தருளினா். இதில், திருஞானசம்பந்தா் சைவ சமயத்தை நிலை நிறுத்திய வரலாற்று லீலை நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை இரவு சுவாமி பிரியாவிடையுடன் தங்க ரிஷப வாகனத்திலும், மீனாட்சியம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்தனா். மண்டகபடிதாரா்கள், பக்தா்கள் வழிபட்டனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையின் துணை ஆணையா் ஆ. அருணாசலம் தலைமையிலான அலுவலா்கள் செய்து வருகின்றனா்.